Wednesday, March 2, 2011

உருளைக் கிழங்கு பொடிமாஸ்

உருளைக் கிழங்கு 200 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக் கிழங்கை ஒரு பாத்திரத்திலிட்டு சிறிது நீர் விட்டு அடுப்பிலேற்ற வேண்டும். உருளைக் கிழங்கு வெந்து பக்குவப்படுவதற்குள் மற்ற பொருட்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

மூன்று பெரிய வெங்காயங்களை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைக் கிள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

உருளைக் கிழங்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நீரை வடித்து தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அவற்றைக் கையினால் பிசைந்து தூளாக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி உப்பைப் பொடி செய்து அதில் போட வேண்டும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட வேண்டும்.

கடுகு வெடித்து பருப்பு சிவந்ததும் வெங்காயம் முதலிய நறுக்கி வைத்தப் பொருட்களைச் சேர்த்து கிளற வேண்டும். வெங்காயம் சிவக்க வதங்கியதும் உருளைக் கிழங்கைப் போட்டு கிளற வேண்டும்.

சிறிது நேரம் கிளறி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment