Thursday, February 24, 2011

இஞ்சிக் குழம்பு

சிறு எலுமிச்சம் பழ அளவு புளியை 250 மில்லி ஜலத்தில் போட்டு இரண்டு தேக்கரண்டி உப்பும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் சுண்டைக்காய் அளவு, கறிவேப்பிலை கொஞ்சம், உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, இவற்றை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் விரல் நீள இஞ்சித் துண்டை அலம்பி தோல் போக்கிச் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அரைத்த விழுதைப் புளி ஜலத்தில் போட்டுக் கரைத்துக் கொண்டு மஞ்சள் பொடி சிறிது, அரிசி மாவு ஒரு தேக்கரண்டி, வெல்லம் சுண்டைக்காய் அளவு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு சட்டியை வைத்து மூன்று தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் அரைத் தேக்கரண்டி கடலைப் பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், சிறிதாய் அரிந்த வெங்காயம் மூன்று தேக்கரண்டி போட்டு வதக்கி சம்பாரத்துடன் கரைத்து வைத்திருக்கும் புளியைச் சட்டியில் கொட்டிக் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து ஒரு ஆழாக்கு அளவுக்கு சுண்டியதும் இறக்கவும்.

No comments:

Post a Comment