Monday, February 28, 2011

மைசூர் ரசம்

துவரம் பருப்பு 50 கிராம் எடுத்து 400 மில்லி நீர்விட்டு நன்கு குழைய வேக வைக்க வேண்டும். நீர் பாதி அளவாகச் சுண்டியதும் பருப்போடு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய்த் துருவல் நான்கு தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கொத்தமல்லி விதை அரைத் தேக்கரண்டி, மிளகு பத்து, பெருங்காயம் சிறிதளவு ஆகிய இந்தப் பொருட்களைத் தனியாக வறுத்து, நைசாகப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

500 மில்லி அளவு நீரில் எலுமிச்சம் பழ அளவு புளி, இரண்டு தேக்கரண்டி உப்பு ஆகிய இந்த இரண்டையும் கரைத்து அடுப்பிலேற்றி கொதிக்க விட வேண்டும்.

புளி நீர் 400 மில்லியாகச் சுண்டியதும் துவரம் பருப்பைக் கெட்டியாகக் கரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும் புளி நீரில் விட வேண்டும்.

ஒரு கொதி வந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை ரசத்தில் போட்டுக் கிளறி விட்டுக் கொதிக்க விட வேண்டும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இரும்புக் கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு அரைக்கால் தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு கால் தேக்கரண்டி, கடலைப் பருப்பு கால் தேக்கரண்டி போட்டுச் சிவந்ததும் கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு சப்தம் அடங்கியதும் ரசத்தில் கிளறிக் கொடுத்துச் சிறிது கொத்தமல்லித் தழை போட வேண்டும்.

No comments:

Post a Comment