Thursday, February 24, 2011

பாசிப்பயறு குழம்பு

100 கிராம் பாசிப் பயறைக் குழம்பு செய்யும் சட்டியில் போட்டு வறுக்கவும். நன்றாக வறுபட்டு சப்தம் அடங்கியதும் இரண்டு ஆழாக்கு சுத்த ஜலம் விட்டு வேக விடவும். சிறிது மஞ்சள் தூள் விடவும்.

200 மில்லி ஜலத்தில் சிறு எலுமிச்சங்காய் அளவு புளியும், இரண்டு தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்து, சாம்பார் பொடி இரண்டு தேக்கரண்டி போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாசிப் பயறு நன்றாக வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைக் கொட்டிக் குழம்பை நன்றாகக் கொதிக்க விடவும். மிளகாய்த் தூளின் நெடி போகும் வரை கொதிக்க விடவும்.

பிறகு ஒரு தக்காளிப் பழத்தை நான்காக அரிந்து கொள்ளவும். சிறிது நாட்டு வெங்காயத்தைப் பொடிப் பொடியாய் அரிந்து கொள்ளவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல் இரண்டு கிள்ளிப் போடவும். கடுகு கால் தேக்கரண்டி, லவங்கப்பட்டை விரல் நீளத் துண்டு ஒடித்துப் போட்டு, இரண்டு கிராம்பு, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவற்றைப் போட்டுத் தாளிதம் செய்து அரிந்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் இரண்டையும் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் குழம்பை எடுத்துத் தாளிப்பில் கொட்டிக் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் கீழே இறக்கிக்கொண்டு பத்து மல்லித் தழைகளை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment