Thursday, February 24, 2011

சௌ சௌ சாம்பார்

100 கிராம் துவரம் பருப்பை 300 மில்லி ஜலத்தில் சிறிது மஞ்சள் பொடி போட்டுக் குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, சுண்டைக்காய் அளவு பெருங்காயம், அரைத் தேக்கரண்டி வெந்தயம், ஆறு மிளகாய் வற்றல் இவற்றை நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

மூன்று தேக்கரண்டி கொப்பரைத் துருவலை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் வதக்கிய கொப்பரைத் துருவலையும் சேர்த்து அம்மியில் வைத்து ஜலம் தெளித்து வெண்ணெய்ப் போல் அரைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சங்காய் அளவு புளியை 300 மில்லி ஜலத்தில் போட்டு மூன்று தேக்கரண்டி உப்பும் போட்டுக் கரைத்துக் கொண்டு, அடுப்பில் வைத்து சௌ சௌ 200 கிராம் அச்சு வெல்லம் போல் அரிந்து, புளி ஜலத்தில் போட்டுக் கொதிக்க விடவும்.

முக்கால் பதம் வெந்ததும், வெந்த துவரம் பருப்பைக் கூழ் போல் கரைத்து, குழம்பில் விட்டுக் கிளறவும். காய் வெந்து பக்குவமானதும் இறக்கிக் கொள்ளவும்.

தாளிப்புக்குப் பாத்திரம் வைத்து 3 தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரைத் தேக்கரண்டி கடலைப் பருப்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளிதம் செய்து சாம்பாரை கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment